- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருப்பத்தூர்
- சிவராத்திரி விழா
- அண்ணாமலை
- மங்கை
- குரும்பேரி கிராமம்
- Tirupathur
திருவண்ணாமலை, மார்ச் 8: திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிவராத்திரி விழாவை தரிசிக்க நடைபயணமாக வந்த மூதாட்டி பைக் மோதி பலியானார். திருப்பத்தூர் அடுத்த குறும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி மங்கை(60). கூலித்தொழிலாளி. இவர், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபயணமாக வந்து திருவண்ணாமலையில் சிவராத்திரி விழாவை தரிசிப்பது வழக்கமாம். அதன்படி, மூதாட்டி மங்கை மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 30 பேர் கொண்ட ஆன்மிக குழுவினர், திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு நடைபயணமாக சென்று கொண்டிருந்தனர். தொடர்ந்து, நேற்று காலை 8 மணியளவில் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் பெரிய கோளாபாடி கிராமத்துக்கு அருகே சாலையோரம் மங்கை உளளிட்டோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பைக், சாலையோரம் சென்று கொண்டிருந்த மூதாட்டி மங்கை மீது மோதியது.
அதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த மங்கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து, பைக்கில் வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இவர், செங்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், பைக்கின் முன்பக்கம் தவில் இசைக்கருவியை வைத்துக்கொண்டு ஓட்டி வந்ததால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலைக்கு நடைபயணம் வந்த மூதாட்டி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post நடைபயணம் வந்த மூதாட்டி பைக் மோதி பலி போலீசார் விசாரணை திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு appeared first on Dinakaran.