×

அரசு பள்ளி பெருமையின் அடையாளம் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி, மார்ச் 7: அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் நேற்று (மார்ச் 6ம் தேதி) புதன்கிழமை நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி விளக்க உரையாற்றினார். விழாவில் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுகளையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் பேசியதாவது: தலைமை ஆசிரியர் என்பது ஒரு பள்ளிக்கு குடும்ப தலைவர் போல், அந்த குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், பணியாளர்கள் என ஒவ்வொருவரைப் பற்றியும், அந்த பள்ளி வளாகம் குறித்த ஒவ்வொன்றும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது பள்ளிக்கூடம். எனவே தலைமை ஆசிரியர்கள் குடும்ப தலைவர்கள் போல் செயல்படுங்கள். அதேபோல் உங்களிடம் பயிலும் மாணவர்கள், நீங்கள் உருவாக்கும் சாதாரண புராடக்ட் அல்ல என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். பள்ளிக்கல்வி துறை என்றாலே எப்போதும் இனமான பேராசிரியர் தான். அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 3,521 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை தான் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஒரே நேரத்தில் 8,500 ஆசிரியர்களை இணையதள வாயிலாக ஒன்றிணைத்து விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 136 தொகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய கட்டுமான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் விதம் குறித்து ஆய்வு நடத்தி உள்ளேன். எனவே தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள கட்டுமான குறைகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்து கொடுப்பது அரசின் கடமை. எனவே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் கட்டுமானங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

இவ்விழாவில், திருச்சி மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளி பெருமையின் அடையாளம் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahesh ,Awards ,Trishi ,Anil Mahesh ,Awards Ceremony ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...