×

திருவள்ளூர் மாவட்ட அளவில் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்த செயற்குழு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர், மார்ச் 7: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் (திருவள்ளூர்) ப.ரவிச்சந்திரன், (கும்மிடிப்பூண்டி) பி.எஸ்.லிவிங்ஸ்டன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை செயல்படுத்தவும் மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திருவள்ளூர் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்தவும் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் மற்றும் நெகிழி கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார். இதில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், த.மணிமேகலை, உதவி பொறியாளர்கள் கி.ரா.லேகா, சு.சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்ட அளவில் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்த செயற்குழு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Thiruvallur District Collector ,District Collector ,T. Prabhushankar ,District Environmental ,Engineers ,P.Ravichandran ,Kummitipoondi ,B.S.Livingston ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...