×

புதுவை வாய்க்காலில் சடலமாக மீட்பு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கொடூரமாக கொன்ற முதியவர் கைது

புதுச்சேரி, மார்ச் 7: புதுவையில் முத்தியால்பேட்டை வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக கொன்று சாக்கடையில் வீசிய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் 2வது நாளாக மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி கடந்த 2ம்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடியபோது மாயமானார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து தேடினர். 4 தனிப்படை அமைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சிறுமியின் கதி என்ன? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தன.

இதனிடையே சிறுமி அப்பகுதியை விட்டு சென்றதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக கருதிய தனிப்படையினர் அங்குள்ள புதர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சோதனையிட்டனர். இதில் துப்பு துலங்கியது. அதாவது மாணவியின் வீட்டில் இருந்து 200மீ தொலையில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடினர். அப்போது சாக்கடைக்குள் கிடந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்து மீட்டனர்.விசாரணையில் சம்பவத்தன்று, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியை சிலர் நோட்டமிட்டு மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து, வேட்டியால் உடலை சுற்றி கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது.

இதனிடையே கால்வாயில் பிணமாக கிடந்த சிறுமியின் உடலை மீட்ட போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியல், முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் சிறுமி கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை தனிப்படை பிடித்து அதிரடியாக விசாரணை நடத்தினர். இதில், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை விவேகானந்தன் ஆசைவார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததும், இதைப் பார்த்த கருணாஸ் உள்ளே வந்து சிறுமியை கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

பலாத்கார முயற்சியில் மயங்கி விழுந்த சிறுமியை, 2 பேரும் கொன்று கை, கால்களை கட்டி மூட்டை கட்டி வாய்க்காலில் தூக்கி வீசியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிந்த போலீசார், அவர்களிடம் வாக்குமூலம் சேகரித்தனர். மேலும் கஞ்சா கும்பலைச் சேர்ந்த சிலரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே சிறுமி சாவுக்கு நீதிகேட்டு புதுச்சேரியில் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுவை வாய்க்காலில் சடலமாக மீட்பு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கொடூரமாக கொன்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puduwai canal ,Puducherry ,Muthialpet ,Puduvai ,Puducherry… ,Puducherry canal ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...