×

புதுச்சேரி சிறுமி படுகொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை முதல் புதுச்சேரியில் பல இடங்களில் தர்ணா போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மதியம் 3 மணியளவில், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சாலை அருகே மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலை என்பதால் அந்த பகுதியில் மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அச்சமயம், போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது சிலர் ஏறி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த லாஸ்பேட்டை போலீசார், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். மேலும் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

அதையும் மீறி போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இதில் மாணவர்கள், பொதுமக்கள், போலீசார் காயமடைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. தொடர் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரி சிறுமி படுகொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry girl massacre ,Puducherry ,Cholainagar ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு