×

புதுச்சேரியில் 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமியை கொன்று கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கடையில் வீச்சு: மக்கள் சாலை மறியல், போலீஸ் தடியடி; கஞ்சா வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் நான்கு நாட்களுக்கு முன் மாயமான சிறுமியை கொன்று பின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் சாக்கடையில் வீசப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9), 5ம் வகுப்பு மாணவி, கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர்.

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாக போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், சோலை நகரையொட்டியுள்ள அம்பேத்கர்நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாய்க்காலில் சோதனையிட்டபோது, மாயமான சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாக கட்டி வாய்க்காலில் வீசியிருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன் அருகே ஒரு பாய், பெட்ஷீட் தலையணையும் வாய்க்காலில் கிடந்துள்ளது. சிறுமி சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து, கொலையாளியை கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பொதுமக்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக 5 வாலிபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். 5 பேருக்கும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. இதனால் கஞ்சா அடித்துவிட்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்து மூட்டை கட்டி வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எப்படி கொலை செய்யப்பட்டார் என தெரியவரும்.

The post புதுச்சேரியில் 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமியை கொன்று கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கடையில் வீச்சு: மக்கள் சாலை மறியல், போலீஸ் தடியடி; கஞ்சா வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு