×

பரபரப்பான கட்டத்தில் ரஞ்சி முதல் அரையிறுதி; கடைசி நாளில் வெற்றி யாருக்கு?

நாக்பூர்: விதர்பா அணியுடனான ரஞ்சி கோப்பை முதல் அரையிறுதியில், 321 ரன் இலக்கை துரத்தும் மத்தியப் பிரதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துள்ள நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா 170 ரன்னுக்கு சுருண்ட நிலையில், மத்தியப் பிரதேசம் 252 ரன் குவித்தது. 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய விதர்பா, 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 343 ரன் எடுத்திருந்தது. 4ம் நாளான நேற்று அந்த அணி 402 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

யஷ் ரத்தோட் 141 ரன் (200 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அக்‌ஷய் வாத்கர் 77 ரன், அமன் மொகடே 59, துருவ் ஷோரி 40, கருண் நாயர் 38, ஆதித்யா 21 ரன் விளாசினர். ம.பி. பந்துவீச்சில் அனுபவ் அகர்வால் 5 விக்கெட் கைப்பற்றினார். கெஜ்ரோலியா, கார்த்திகேயா தலா 2, ஆவேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துள்ளது.

யஷ் துபே 94, ஹர்ஷ் காவ்லி 67, வெங்கடேஷ் அய்யர் 19, சாகர் சோலங்கி 12, ஹிமான்ஷு 8, கேப்டன் ஷுபம் ஷர்மா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சரண்ஷ் (16), கார்த்திகேயா (0) களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, ம.பி. வெற்றிக்கு இன்னும் 93 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

The post பரபரப்பான கட்டத்தில் ரஞ்சி முதல் அரையிறுதி; கடைசி நாளில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : Ranji ,Nagpur ,Ranji Trophy ,Vidarbha ,Madhya Pradesh ,Vidarbha Cricket Association… ,Dinakaran ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...