×

சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனுக்கு கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ஆட்டோ

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தனது விருப்ப நிதியிலிருந்து வாங்கப்பட்ட ஆட்டோக்கான சாவியினை சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனுக்கு வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நடுகுத்தகை, அருந்ததியர் பாளையம், விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகியான எஸ்.சுப்பிரமணியம் என்பவரின் மனைவி சாந்தா என்பவர் கடந்த 19ம் தேதி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது கணவர் எஸ்.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகி. எனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. பிழைப்பு நடத்த வழியில்லாமல் இருக்கிறோம். எனது மகன் ரமேஷ் வேலையில்லாமல் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். போதிய நிதி இல்லாத காரணத்தால், தங்களால் மகனுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க இயலவில்லை. எனவே சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இம்மனுவின் மீது, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் மூலமாக மானியத்தில் ஆட்டோ வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த ஆட்டோவின் மொத்த விலை ரூ.3 லட்சத்து 20 ஆயிரமாகும். இதில், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் மூலமாக ரூ.80 ஆயிரம் மானியமாகவும், மனுதாரரின் பங்களிப்பாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மீதமுள்ள ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து, காசோலையாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி எஸ்.சுப்பிரமணியத்தின் மகனான ரமேசுக்கு ஆட்டோக்கான சாவியினை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.இந்த நிகழ்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கணேசன், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனுக்கு கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ஆட்டோ appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Collector ,T.Prabhushankar ,Thiruvallur District Collectorate ,Thiruvallur District ,Tiruninavur Nadukuthagai ,Arunthathiyar Palayam ,Vinayagar Kovil Street ,Vinagar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...