×

சாலை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் காதை கடித்து குதறிய ஆட்டோ டிரைவர் கைது: உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்

காஞ்சிபுரம்: திருவள்ளூர் அருகே சாலை போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் காதை கடித்து தனியாக எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் தண்ணீர்குளம் திமுக கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளி அருகில் 12 அடி சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளன் பார்வையிட்டு கொண்டு இருந்தார். அப்போது, தண்ணீர்குளம் ஊராட்சி, கணபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகாலிங்கம் (42) என்பவர் அங்கு வந்து, தனது ஆட்டோவின் வசதிக்காக சாலையை சரிவாக அமைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது, அப்படியெல்லாம் செய்ய முடியாது என தயாளன் கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி (73) ஆகியோர் தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றியநிலையில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம், தயாளனின் இடது புற காதை கடித்து துப்பினார். இதில், தயாளனின் இடது காது தனியாக வந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவிகாவின் மகன் தியாகு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தயாளனின் காதை கடித்து தனியாக எடுத்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தண்ணீர்குளம் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் காதை கடித்து குதறிய ஆட்டோ டிரைவர் கைது: உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tiruvallur ,Tiruvallur Union Watershed Panchayat Council ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...