×

மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையொட்டி கொட்டப்படும் குப்பை மற்றும் உணவு கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரி வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சிக்குட்பட்ட இளந்தோப்பு, சாலவான் குப்பம் தொடங்கி, பட்டிப்புலம் வரை சமீப காலமாக இசிஆர் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகள், உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகள், சுபநிகழ்ச்சிகளுக்கு அலங்கார வளைவில் பயன்படுத்தும் தெர்மாக்கோல் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதில், குறிப்பாக இளந்தோப்பு பகுதியில் இசிஆர் சாலையொட்டி குப்பை கழிவுகள், உணவு கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது.

இதனால், இசிஆர் சாலையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த குப்பை மற்றும் உணவு கழிவுகளை பன்றி, மாடுகள் கிளறுவதால் காற்றில் பறந்து வந்து சாலையில் விழுகிறது. அந்த, குப்பையில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிடுவதில் பன்றி மற்றும் மாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டு, சாலையில் குறுக்கே அங்கும், இங்குமாக ஓடி வாகனங்கள் மீது மோதுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.

இது குறித்து, இரவு ரோந்துப்பணி செல்லும் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டும் காணாதது போல் மெத்தனமாக உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் காரில் ரோந்துப் பணி செல்லும் போலீசார் முழுமையாக ரோந்துப் பணியில் ஈடுபடாமல் காரை நிறுத்திவிட்டு தூங்கி விடுகின்றனர். இந்த, சமயத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் குப்பை கழிவுகளை அதிகளவில் கொட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இசிஆர் சாலையோரம் இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : ECR ,Mamallapuram ,Chennai ,Puducherry ,
× RELATED கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல்...