×

அடையாறு மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடையாறு மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (05.03.2024) அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட ஜோதியம்மாள் நகரில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சின்னமலை, வெங்கடாபுரம் பகுதியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, மேற்கு மாம்பலம், அண்ணாமலை நகர், 3வது தெருவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

பின்னர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர்.காலனி, 3வது தெருவில் மேயர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.37 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மேயர் திருமதி ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதிப்பிற்குரிய துணை மேயர் மு. மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர். துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப.சுப்பிரமணி, எம்.ஸ்ரீதரன், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அடையாறு மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister of Medicine and Public Welfare Subramanian ,Idaiyaru ,Kodambakkam ,Minister ,Superman ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...