×

‘இது மோடி சுட்ட வடை’ மோடி அண்ணாச்சி ரூ.15 லட்சம் என்னாச்சு: திமுக நூதன பிரசாரம்

திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து, திட்டங்களை துவக்கி வைத்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் பல திட்டங்களை நிறைவேற்றியதாக பொய் சொல்லி வருகிறார். அவர் வாயால்தான் வடை சுடுகிறார் என்று கூறி, மோடி சுட்ட வடை என்று துண்டு பிரசுரம் அச்சடித்து திருச்சியில் திமுகவினர் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அப்போது துண்டு பிரசுரத்துடன் மக்களுக்கு வடையும் கொடுக்கின்றனர்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.அருண் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உறையூர், தில்லைநகர், திருவெறும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வடையுடன், துண்டு பிரசுரம் விநியோகித்தனர். அந்த துண்டு பிரசுரத்தில், மோடி அண்ணாச்சி ரூ.15 லட்சம் என்னாச்சு?, டீசல் விலை குறைச்சாச்சா?, கருப்பு பணம் மீட்டாச்சா?, எய்ம்ஸ் கட்டி முடிச்சாச்சா?, 2 கோடி வேலைகள் தந்தாச்சா?, விவசாயி வருமானம் இரட்டிப்பாச்சா?, மீனவர்களுக்கு பாதுகாப்பு தந்தாச்சா?, இந்தியா வல்லரசு ஆயாச்சா?, நாட்டோட கடன் 150 லட்சம் கோடியை கட்டியாச்சா?, வரும்போதெல்லாம் வடைதான் நீங்க சுடுறீங்க! சொன்னதை எப்போ செய்வீங்க? என அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன பிரசாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post ‘இது மோடி சுட்ட வடை’ மோடி அண்ணாச்சி ரூ.15 லட்சம் என்னாச்சு: திமுக நூதன பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Modi Annachi ,DMK ,Nutana Prasaram ,Tamil Nadu ,Nuthana Prasaram ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...