×

கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த பாகுபலி யானை

 

மேட்டுப்பாளையம், மார்ச் 5: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. நீண்ட தந்தங்கள் மற்றும் பிரம்மாண்ட உருவத்தால் மக்களால் பாகுபலி என இந்த யானையை செல்ல பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்ததோடு மனிதர்களை அச்சுறுத்தி வந்தது.

வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வந்ததால் கடந்த சில மாதங்களாக அந்த யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து உலாவி வருகிறது. மேலும், கோடை காலம் தொடங்கும் முன்னரே தற்போது வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி இந்த பாகுபலி யானை சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் சுற்றி வருகிறது. நேற்று காலை சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றது.
தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததால் யானையால் சாலையை கடக்க முடியவில்லை.

இதனையடுத்து, சாலையில் கம்பீரமாக நடக்க துவங்கிய பாகுபலி யானை சிறிது நேரம் நின்று வாகன போக்குவரத்தை வழி மறித்தது. நடுரோட்டில் யானை ஒன்று நின்றிருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை எச்சரிக்கை செய்யும் விதமாக லேசாக முட்டி அச்சுறுத்தியது.

பின்னர், சுமார் 20 நிமிடங்களுக்கு பின் பாகுபலி யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

The post கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த பாகுபலி யானை appeared first on Dinakaran.

Tags : Kotagiri road ,Mettupalayam ,Odanthurai ,Thekambatti ,Nellithura ,Samayapuram ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...