சென்னை: அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிடுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்சுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று தொடங்கியது. அப்போது எடப்பாடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தனது எக்ஸ்தள பக்கத்தில் இன்னும் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார்.
அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னும் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவருவது கண்டிக்கத்தக்கது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்திற்காக விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post அதிமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து தெரிவிக்கிறார்: உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.