×

கார்களில் ₹3.32 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல்

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி பகுதியில் 2 இடங்களில் கார்களில் கடத்த வரப்பட்ட ₹3.32 லட்சம் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி போலீஸ் எஸ்ஐ மாரி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பாலக்கோடு- பென்னாகரம் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். உடனே, காரில் வந்த 2 பேர் வண்டிகை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். அதில், ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி விட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 157 கிலோ குட்கா மற்றும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ₹70 ஆயிரம் ஆகும்.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், பென்னாகரம் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டூரங்கன் மகன் அருள்(26) என்பதும், தப்பி ஓடியவர் பென்னாகரம் கிட்டம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்து(27) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முத்துவை தேடி வருகின்றனர்.

இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு வனவர் ராஜேஸ்குமார், வனத்துறையினருடன் மஞ்சவாடி கணவாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காரில் வந்தவர்கள், வனத்துறையினரை பார்த்ததும் திடீரென காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, காரை சோதனை செய்தபோது, 481 கிலோ குட்கா மற்றும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹2.62 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

The post கார்களில் ₹3.32 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Dharmapuri ,Dharmapuri District ,Paparapatti Police ,SI Mari ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்