×

குப்பை கூட்டிய தகராறில் சிறுவன் படுகாயம்: தம்பதி மீது வழக்கு

 

போடி, மார்ச் 4: போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகே வசிப்பவர் தர்மராஜ். இவரது மனைவி ராக்கம்மாள். இரண்டு குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வேளாங்கண்ணி வீட்டிற்கு முன்பாக சிதறி கிடந்த குப்பைகளை கூட்டிக் கொண்டிருந்தார். அப்போது தர்மராஜூம், ராக்கம்மாளும் மீண்டும், மீண்டும் குப்பைகளை கொட்டி தகராறு செய்துள்ளனர். இதனை வேளாங்கண்ணி தட்டிக்கேட்டார். அப்போது அவரை ராக்கம்மாளும், தர்மராஜூம் அவதூறாக பேசியுள்ளனர்.

மேலும் ஆத்திரத்தில் ராக்கம்மாள் அங்கிருந்த செங்கல்லை எடுத்து வீசினார். அந்த செங்கல் அங்கிருந்த வேளாங்கண்ணியின் 4 வயது மகன் மீது விழுந்தது. இதில் காயமடைந்த சிறுவனுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி புகார் செய்தார். எஸ்.ஐ இதிரிஸ்கான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post குப்பை கூட்டிய தகராறில் சிறுவன் படுகாயம்: தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Sakthi ,Ramakrishnapuram Kaliamman Koil Street ,Velankanni ,Dharmaraj ,Rakammal ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்