×

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை,மார்ச் 4: திருவாடானை அருகே மயிலாடுவயல் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பூனைக்குட்டிவயல் – மயிலாடுவயல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பிரதான சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

இதனால் தினசரி இந்த சாலையில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இந்த சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் பதம் பார்ப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் அவசரகால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட இந்த பயன்பாட்டிற்கு லாயக்கற்ற சாலை வழியாக உள்ளது. இதனால் அங்கு வர மறுப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சேதமடைந்த சாலையின் வழியாக தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இவ்வழியாக நடந்து செல்லும் போது அந்த சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் அவர்களின் கால்களை பதம் பார்த்து விடுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து சிறுகாயங்களுடன் எழுந்து செல்லும் நிலை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகையால் அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் வாகனங்களை பதம் பார்க்கும் இந்த பஞ்சரான சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Mayiladuwayal ,Poongkuttivyal ,Mayiladuvyal ,AIADMK ,Thiruvadan ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்