ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 4: ஸ்ரீபெரும்புதூர் அருகேயு ள்ள பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் மண் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி அதே பகுதியில் உள்ள சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுகிறது. அவை, வைப்பூர், அதன் சுற்று வட்டார பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு மண் திருடப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைகிறது.இரவு நேரங்களில் நடைபெறும் மண் கொள்ளை குறித்து ஒரகடம் காவல் துறைக்கும், பொதுப்பணி துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் மண் கொள்ளை appeared first on Dinakaran.