×

நவல்பட்டு ஐடி பார்க் 100 அடி சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

திருவெறும்பூர், மார்ச் 3: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள ஐடி பார்க்கிற்கு வரும் 100 அடி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் 100 அடி சாலை திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. இந்த சாலை வழியாக திருச்சி ஏர்போர்ட்டிற்கும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் புதுக்கோட்டை, மதுரை பகுதிக்கு எளிதாக சென்று வர முடியும். இதனால் நவல்பட்டு அண்ணாநகர் போலீஸ் காலனி உள்ளிட்ட திருவெறும்பூர் சுற்று வட்டப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு நவல்பட்டு அண்ணாநகரில் தமிழக அரசு ஐடி பார்க் தொடங்கப்பட்ட நிலையில் ஐடி பார்க்கில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் தங்களுக்கு வெளி மாநிலம் நாடுகளுக்கு சென்று வருவதற்கு விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் இந்த சாலை தரமான சாலையாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் 100 அடி சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் எப்பொழுதும் இருட்டாகவே உள்ளது.

மேலும் 100 அடி சாலையின் நடுவே அரளி செடி அல்லது பூச்செடிகள் ஏதாவது வைக்க வேண்டும், அதை நெடுஞ்சாலை துறையினர் செய்யாததால் அதில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் முட்புதர்களிலிருந்து விஷஜந்துக்கள் வெளியே ஓடுகிறது. இது வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாததால் வாகனங்களை ஓட்டுபவர்கள், நடந்து செல்பவர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவல்பட்டு அண்ணாநகர் 100 அடி சாலையில் போதுமான மின்விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் சாலையின் நடுவே வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையிலும், பாதுகாக்கும் வண்ணமும் அரளி செடி மற்றும் பூக்கள் நட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நவல்பட்டு ஐடி பார்க் 100 அடி சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nawalpattu IT Park ,Thiruverumpur ,IT Park ,Nawalpattu Anna Nagar ,Nawalpattu Annanagar ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...