×

53-வது தேசிய பாதுகாப்பு வார விழா நாளை முதல் தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பு: தஞ்சாவூர் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் தகவல்

தஞ்சாவூர்,மார்ச்3: தஞ்சாவூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மாலதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய பாதுகாப்பு குழுமம் இந்திய அரசால் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டதையடுத்து 1972-ம் ஆண்டிலிருந்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி, தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளுடன் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சுழல், சமூக தாக்கங்களை கூட்டாக நிர்வகிக்கும் ஆளுமைத்திறன் சிறந்து விளங்க பாதுகாப்புத் தலைமை மீது கவனம் கொள்வோம்\\” என்ற கருப்பொருளுடன் 53வது தேசிய பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இயந்திரமயமாக்கல் உச்சம் கொண்டிருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் இன்னல்களான விபத்துகள், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை எதிர்கொள்ளஇக்கருப்பொருள் மிகவும் பொருத்தமானது. சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாமல் சமூக மேம்பாட்டினை அடைவதற்கான பாதுகாப்பு திட்டங்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் வகுத்து செயலாற்ற வேண்டும். இச்செயல்பாடுகளை இளம் தலைமுறையினரிடையேயும் ஊக்குவிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் வரும் மார்ச் 4ம் தேதி முதல் ஒரு வாரகாலம் தேசிய பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு தினம் மற்றும் வாரவிழா கொண்டாட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு தினத்தின் நோக்கத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில், பல்வேறு கருத்தரங்குகள் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி, பட்டிமன்றங்கள், நாடகங்கள், கண்காட்சிகள் அல்லது பாதுகாப்பு குறும்படங்கள் ஒளிபரப்புதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விபத்துகள் ஏற்படுவதில்லை; ஏற்படுத்தப்படுகின்றன. நவீன உலகில் விபத்துக்களுடன் உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளும் சந்தையில் நிலை நிற்க முடியாது.

தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சியை வழங்கி தகுந்த சுயபாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா உலகை படைப்போம். தேசிய பாதுகாப்பு தினத்தில் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்று அரசாங்கம், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து விபத்தில்லா இலக்கை எட்டுவோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 53-வது தேசிய பாதுகாப்பு வார விழா நாளை முதல் தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பு: தஞ்சாவூர் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 53rd National Safety Week Celebration National Safety Week ,Thanjavur ,Industrial ,Safety ,Information ,Industrial Safety and Health ,Malathi ,National Safety Council ,Government of India ,53rd National Safety Week ,First National Safety Week ,Industrial Safety Information ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...