×

கடவூர், தோகைமலை பகுதிகளில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை, மார்ச் 3: கடவூர், தோகைமலை பகுதிகளில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அதிக மகசூல் பெற புதிய தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னோடி விவசாயிகள் கூறுகையில், வறட்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையதால் வறட்சியான பகுதிகளிலும் சோளம் விதைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் சோளம் பயிரிடலாம். சாகுபடி செய்யப்படுகின்ற சோளமானது தானியங்களுக்காகவும், வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சோளப்பயிரானது அனைத்து பகுதிகளிலும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிரிடலாம்.
அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமானமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது மழை குறைவாக பொழியும் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சோளம் சாகுபடியில் பெரும்பாலும் நாட்டு சோளம் ரகத்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை சோளமானது சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது ஆகும். சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சோளம் சாகுடிக்கு ஏற்ற பருவ ஆகும். இதில் சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று அடிக்கும் போது அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக இருக்கும். எனவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்ததாக அமைகிறது. ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை சோளம் தேவைப்படுகிறது.
சோளம் சாகுபடியின் போது விதை நேர்த்தி செய்து பயிரிட்டால் நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாப்பதோடு நல்ல மகசூலும் அடையலாம்.

இதில் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா, நன்றாக ஆரிய அரிசி கஞ்சி 200 மில்லியில் சோள விதைகளை கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள் விதை நேர்த்தி செய்யப்பட்ட சோள விதைகளை விதைக்க வேண்டும். இதேபோல் சோளம் சாகுபடி செய்வதற்கு முன்பு 4 முறை நன்றாக உழவு பணிகளை செய்ய வேண்டும். உழவு பணிகளை செய்யப்பட்டு உள்ள வயலில் மண்ணில் கட்டிகள், கல், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் மண்ணை பொது பொதுப்புடன் வைத்திருக்க வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் மக்கிய தொழு உரங்களை நிலத்தில் பரப்பி விட்டு உழவு பணிகளை செய்ய வேண்டும்.
சோளம் சாகுபடியில் கடைசியாக உழவு பணிகளை தொடங்குவதற்கு முன்பு விதை நேர்த்தி செய்யப்பட்ட சோள விதைகளை விதைக்க வேண்டும். அதன் பிறகு கடைசி உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் சோள விதைகளை பசுமாட்டு கோமியத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியை தாங்கி வளர்வதோடு கரிப்பு+ட்டு நோயை கட்டுப்படுத்தலாம்.

இதேபோல் சோளம் சாகுபடி செய்யப்படும் வயலில் அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீயா 2 கிலோ ஆகிய உயிர் உரங்களை, 100 கிலோ மக்கிய தொழு எருவுடன் கலந்து ஈரம் இருக்கும் பொழுது தூவி விடவேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ காம்ப்ளக்ஸ் வயலில் ஈரம் இருக்கும் பொழுது சீராக தூவி விடலாம். மேற்படி முறைகளில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தால் நல்ல மகசூல் பெற்று லாபம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடவூர், தோகைமலை பகுதிகளில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Tokaimalai ,Thokaimalai ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...