×

மும்பையுடன் ரஞ்சி அரையிறுதி: முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 146 ரன்னுக்கு சுருண்டது

மும்பை: ரஞ்சி கோப்பை 2வது அரையிறுதியில் மும்பை அணியுடன் மோதும் தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்சில் 146 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை, பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேற, ஜெகதீசன் 4, பிரதோஷ் ரஞ்சன் பால் 8, சாய் கிஷோர் 1, பாபா இந்திரஜித் 11 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

தமிழ்நாடு அணி 16.3 ஓவரில் 42 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், விஜய் சங்கர் – வாஷிங்டன் சுந்தர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. விஜய் ஷங்கர் 44 ரன் (109 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் முலானி வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த முகமது 17 ரன், அஜித் ராம் 15 ரன்ன்னில் பெவிலியன் திரும்ப… சந்தீப் வாரியர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் கடுமையாகப் போராடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன் எடுத்து (138 பந்து, 5 பவுண்டரி) தனுஷ் கோடியன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டது (64.1 ஓவர்). குல்தீப் சென் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4, ஷர்துல் தாகூர், முஷீர் கான், தனுஷ் கோடியன் தலா 2, மோகித் அவஸ்தி 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 5, பூபென் லால்வானி 15 ரன்னில் ஆட்டமிழந்தனர். முஷீர் கான் 24 ரன், மோகித் அவஸ்தி 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, வலுவான முன்னிலை பெறும் முனைப்புடன் மும்பை அணி இன்று 2வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

விதர்பா 170க்கு ஆல் அவுட்
நாக்பூரில் நேற்று தொடங்கிய ரஞ்சி முதல் அரையிறுதியில், டாஸ் வென்று பேட் செய்த விதர்பா அணி 56.4 ஓவரில் 170 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கருண் நாயர் அதிகபட்சமாக 63 ரன் (105 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார். அதர்வா 39, யஷ் ரத்தோட் 17, துருவ் ஷோரி, அமன் மொகாடே தலா 13, ஆதித்யா சர்வதே 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர் (3 பேர் டக் அவுட்).
மத்திய பிரதேச பந்துவீச்சில் ஆவேஷ் கான் 4, வெங்கடேஷ் அய்யர், குல்வந்த் கெஜ்ரோலியா தலா 2 விக்கெட், அனுபவ் அகர்வால், குமார் கார்த்திகேயா தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்கிசை தொடங்கிய மத்திய பிரதேம் முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்துள்ளது. ஹிமான்ஷு மந்த்ரி 26, ஹர்ஷ் காவ்ளி 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post மும்பையுடன் ரஞ்சி அரையிறுதி: முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 146 ரன்னுக்கு சுருண்டது appeared first on Dinakaran.

Tags : Ranchi semi-final ,Mumbai ,Tamil Nadu ,TAMIL ,NADU ,RANJI CUP ,Bandra Kurla Campus Ground ,Ranchi ,-final ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!