×

இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் மக்களுக்கு தேவையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பாலை மூலப்பொருளாக வைத்து மோர், தயிர் உள்பட பல்வேறு பால் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு 31 லட்சம்‌ லிட்டர்‌ பால் மற்றும்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது.

ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த தரத்துடன்‌, குறைந்த விலையில்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன்‌ தேவை அதிகரித்த வண்ணம்‌ உள்ளது. பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், சாக்லேட், குல்பி ஐஸ், கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், கசாடா உள்ளிட்ட சுமார் 100 வகையான பால் பொருட்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2 முதல் 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் சாகோபர் 65 மில்லி ரூ.20லிருந்து ரூ.25ஆக அதிகரிக்கிறது. வெண்ணிலா பால் 125 மில்லி ரூ.28ல் இருந்து ரூ.30 ஆகவும், கிளாசிக் கோன் வெண்ணிலா மற்றும் சாக்லேட் 100 மில்லி ரூ.30லிருந்து ரூ.35 ஆக அதிகரிக்கிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு அவற்றை விரும்பி வாங்கும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Avin ,Chennai ,Ava ,Awin ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...