×

காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்: உடலை சூட்கேசில் அடைத்து ஓடையில் வீசிய கொடூரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே இளம்பெண் தன் குழந்தையை தகாத உறவு காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை சூட்கேசில் மறைத்து வைத்து ஓடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (19). இவர்களது ஆண் குழந்தை கலையரசன் (11 மாதம்). அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (50). அவரது மனைவி உஷா. இந்த தம்பதியின் மகன் ஜெயசூர்யா (23).

இந்த நிலையில் பிரியாவுக்கும், ஜெயசூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நன்றாக பேசிப்பழகிய இருவருக்கும் ஏற்பட்ட ஈர்ப்பு ஒருகட்டத்தில் தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரியா திடீரென தனது குழந்தையுடன் காதலன் ஜெயசூர்யாவுடன் சென்றுவிட்டார். இதனால் பதறிப்போன மணிகண்டன் பல இடங்களில் தேடினார். பிரியாவின் உறவினர்களும் தேடினர். ஆனாலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஜெயசூர்யாவுடன் சென்ற ஸ்ரீபிரியா கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூருக்கு வந்துவிட்டார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாயார் உஷா மற்றும் காதலி பிரியா அவரது குழந்தை என அனைவரும் தங்கியிருந்தனர். அதேபகுதியில் தான் பிரியாவின் உறவினரான சிலம்பரசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா காதலனுடன் மாயமான விஷயம் தெரியும். இந்த நிலையில் நேற்று சிலம்பரசன் திரூர் பகுதியில் வைத்து தற்செயலாக பிரியாவையும், ஜெயசூர்யாவையும் பார்த்துள்ளார்.

அப்போது அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது, பிரியா திருதிருவென முழித்துள்ளார். முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினார். இதனால் சந்தேகமடைந்த சிலம்பரசன் இது குறித்து திரூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உடனடியாக பிரியாவையும், ஜெயசூர்யாவையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவலை பிரியா தெரிவித்தார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பிரியா தனது குழந்தையுடன் காதலனுடன் வந்துவிட்டபோதிலும் அவருக்கு நிம்மதியில்லையாம். காதலனுடன் ஜாலியாக இருக்க தனது குழந்தை கலையரசன் இடையூறாக இருப்பதாக கருதினாராம். இதனால் பிரியாவும், ஜெயசூர்யாவும் சேர்ந்து கலையரசனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.கடந்த 2 மாதத்துக்கு முன்பு இருவரும் சேர்ந்து கலையரசனை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று இரவு திருச்சூர் சென்றோம். அங்கு நடத்திய சோதனையில் ஓடை அருகே குழந்தையின் உடல் வைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்தது. அதனை திறந்து பார்த்தபோது குழந்தை கலையரசனின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையே இந்தக் கொடூர கொலையை செய்த பிரியா, ஜெய சூர்யா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

The post காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்: உடலை சூட்கேசில் அடைத்து ஓடையில் வீசிய கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Malappuram ,Kerala ,North Mooliyur ,Cuddalore ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...