×

இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட அனலாக தொடங்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

டெல்லி: இவ்வாண்டு இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தைவிட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டில், கோடை காலம், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலம், குளிர் காலம் என, நான்கு வகை பருவகாலங்கள் நிலவுகின்றன. தென்மேற்கு பருவமழை, ஜூன் முதல் அக்டோபர் வரையில் நீடிக்கும். பின், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரம் முதல் ஜனவரி 2ம் வாரம் வரை நிலவும். இதையடுத்து, பிப்ரவரி வரையிலும் குளிர்காலம் நிலவும். இதையடுத்து மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை, கோடை காலம் நிலவும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடை காலம் இன்று துவங்குகிறது. இந்த காலத்தில், தமிழகத்தில் 104 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெயில் பதிவாகும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு எல் நினோ எனப்படும் பசிபிக் கடல் வெப்ப நீரோட்ட நிகழ்வு நடப்பு கோடையிலும் நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும். அதே நேரத்தில் மார்ச்சில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் எனவும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பமும் குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட அனலாக தொடங்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : India ,Indian Meteorological Centre ,Delhi ,
× RELATED இந்தியாவில் அதிக வெப்ப அலை வீசிய...