சென்னை: மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விசிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, திமுக – விசிக இடையே நாளை மீண்டும் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணியில் வி.சி.க அங்கம் வகிக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 எம்.பி தொகுதிகளை பெற்று திருமாவளவனும், வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விசிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.