×

ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்

திண்டோரி: மத்திய பிரதேசத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியான நிலையில், 21 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் ஷாபுரா பகுதியில் நடந்த ‘கோத் பாராய்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள், தங்களது கிராமத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ‘பிக்கப்’ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள மேற்கண்ட விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Tindori ,Koth Parai ,Shapura ,Dindori district ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?