×

திமுகவிற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்றுயிருக்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்

சென்னை: திமுகவிற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்றுயிருக்கிறதே தவிர திமுகவிற்கு இது வரையில் முடிவு என்பதே கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்கும் 30 வது சீராய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படவே இல்லை. ஆனால், முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.2 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சட்டப்பிரிவு 49(i) ன் கீழ் வருகின்ற நிதிவசதியில்லாத கோயில்களில் திருப்பணி செய்திடும் வகையில் முதற்கட்டமாக 500 கோயில்களில் அரசு நிதி மற்றும் துறை நிதியின் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள 14 சமணத் கோயில்களை புனரமைக்க எந்த ஆட்சியிலும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் 100 புதிய குடியிருப்புகள் உருவாக்கப்படும், பதிப்பகப் பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 216 அரிய பக்தி நூல்களை உலகெங்கிலுமுள்ள ஆன்மீக அன்பர்கள் படித்து பயன்பெறும் வகையில் மின் நூல்களாக (E-Book) வெளியிடப்படும், 45,477 கோயில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது.இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோயில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்றுயிருக்கிறதே தவிர திமுகவிற்கு இது வரையில் முடிவு என்பதே கிடையாது. இது ஆயிரம் காலத்து பயிர். இந்த கட்சியும், ஆட்சியும் தொடர்ந்து கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த மண்ணிலே இருக்கும்.ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலத்திற்கு கொடுப்பதே இல்லை. வஞ்சிக்கிறது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை.

வஞ்சிப்பது ஒன்றிய அரசு தான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் தமிழ்நாடு முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருதி மாநில நிதியிலேயே அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது.

The post திமுகவிற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்றுயிருக்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Minister ,P. K. Sakharbapu Katham ,Chennai ,Dimug ,Hindu Minister of Religious Affairs ,P. K. Sekarpapu ,Hinduism ,Office of the Commissioner of Indian Trustees ,P. K. Sekarbabu Katham ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...