×

ரூ.20 லட்சம் முறைகேடு செய்த விவகாரம்; அதிமுக மாஜி எம்எல்ஏ வீடு உள்பட 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.15 கோடி ஆவணங்கள் சிக்கியது

பண்ருட்டி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ₹ 15 கோடி ஆவணங்கள் சிக்கியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தலைவராக 2011 முதல் 2016ம் ஆண்டு வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம், 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்டமன்ற உரிமை குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையிலான குழு மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சைக்கிள் ஸ்டாண்ட் உரிமத்தில் ₹20 லட்சம் வரை முறைகேடு நடந்தை கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 5 மணியளவில் பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம், பண்ருட்டி கந்தன்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் நண்பர் பெருமாள் (வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) வீடு, எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் மோகன், பத்திர விற்பனையாளர் செந்தில்முருகா ஆகியோர் வீடுகள், சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி ேசாதனை நடத்தினர்.

இது தொடர்பாக பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பெருமாள், பத்திரம் செந்தில், எலக்ட்ரிக்கல் மோகன் மற்றும் முன்னாள் ஆணையர் பெருமாள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், நிலம் மற்றும் மனை சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ₹15 கோடியை 64 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.20 லட்சம் முறைகேடு செய்த விவகாரம்; அதிமுக மாஜி எம்எல்ஏ வீடு உள்பட 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.15 கோடி ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Panruti ,Satya Panneerselvam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு