×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா * நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் * அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலை மாவட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது குறித்து, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தனது இளம் வயதிலேயே இருவண்ண கொடி ஏந்தி, இயக்கம் காக்க, இனம் காக்க, 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஓயாமல் உழைத்து. உழைத்து தொண்டால் உயர்ந்த தியாகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி, துரோகங்களை, சூழ்ச்சிகளை தூள் தூளாக்கியவர். எழுச்சிமிக்க இளைஞர் அணியை கட்டியமைத்து, திராவிட முன்னேற்ற கழகம் காத்து வீறுநடைப் போட்ட அற்புதத் தலைவர்.

திமுக தலைவராக பொறுப்பேற்றது முதல், எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர். இந்தியாவின் மிகப் பெரிய இயக்கமாக திமுகவை நிலைநிறுத்தியவர். உங்களில் ஒருவன் என்று தொண்டரோடு தொண்டராக களத்தில் நின்று உழைத்து உயர்ந்து நின்றவர். தமிழ்நாடு மக்களின் நெஞ்சங்களில் அன்பால் இடம் பிடித்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர். முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மகளிர், இளைஞர், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களின் உயர்விற்கும் தினந்தோறும் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி, எல்லோருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த லட்சியத்துடன் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற நாளில் தொடங்கி, மகளிருக்கு இலவச பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ₹1000. புதுமைப்பெண் திட்டத்தில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக்கல்வி, வேளாண்மைக்கு தனி பட்ஜெட், விவாசயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ₹1000, தாயுமானவர் திட்டத்தில் ஏழைகளின் வறுமை ஒழிப்பு, கலைஞர் கனவு இல்லத்தில் 8 லட்சம் காங்கிரீட் வீடுகள், மாநகராட்சி தோறும் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் என பல்வேறு திட்டங்களை தீட்டி, சிறப்பாக செயல்படுத்திவரும் முதல்வருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூக நீதி கொள்கைப்படி, மதவெறியை சாய்த்து, மனிதநேயத்தை காப்போம் என்ற அடிப்படையில், மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் கூடிய திராவிட தலைவரின் பிறந்த நாள் விழாவை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகளும், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடுதல், ரத்த தானம் செய்தல்,நீர்நிலைகளை செப்பனிடுதல், மார்ச் 1ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல். திமுக கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல் மற்றும் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்களை நடத்துதல் என முதல்வரின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் எழுச்சியாக கொண்டாடிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா * நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் * அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Minister ,A.V. Velu ,Tiruvannamalai district ,Thiruvannamalai ,Public Works Minister ,AV Velu ,Public Works ,Highways ,AV ,Velu ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...