×

மார்த்தாண்டத்தில் வடிகாலில் கழிவுநீரை ஊற்றிய லாரிக்கு ₹10 ஆயிரம் அபராதம்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் வடிகாலில் செப்டிக் டேங்க் கழிவுநீர் ஊற்றிய கழிவுநீர் லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மார்த்தாண்டம் வடிகாலில் வணிக நிறுவனங்களின் கழிப்பிட கழிவுநீர் கொட்டப்படுவதாக குழித்துறை நகராட்சிக்கு புகார் வந்தது. இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டு உறுதியானால் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல்களிலிருந்து கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுநீரை தனியார் லாரியில் சேகரித்து நள்ளிரவில் மார்த்தாண்டம் பணிமனை அருகே வடிகாலில் கொட்டியுள்ளனர். இது பாய்ந்து கீழ்ப்பம்பம் பகுதி வரை துர்நாற்றம் வீசி உள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்ட போது, தனியார் கழிவுநீர் அகற்றும் லாரி இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கழிவுநீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி வளாகத்தில் சுமார் 10 நாட்களாக நிறுத்தப்பட்டது. நேற்று இந்த லாரியின் உரிமையாளர் வந்ததைத் தொடர்ந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஹோட்டலுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமத்திலகம் உத்தரவின் பேரில் நேற்று சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் மார்த்தாண்டம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 3 கடைகளில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 கடைகளில் உள்ள குப்பைகளை ரோட்டில் கொட்டியது தெரியவந்தது. இந்த 6 கடைகளுக்கும் ரூ.52 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மார்த்தாண்டத்தில் வடிகாலில் கழிவுநீரை ஊற்றிய லாரிக்கு ₹10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Kulitura Municipality ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...