×

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது ரத்து: சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக கடந்த 2012ல் அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து கடந்த 2023 மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். அவர், நேற்று அளித்த தீர்ப்பில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் பெரியசாமியின் முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்கு பின் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அந்த மனுவை ஏற்றுக் அமைச்சரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மார்ச் 26க்குள் மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ம் தேதி அங்கு ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணைசெலுத்த வேண்டும். விசாரணையை ஜூலை 31க்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை தாமதப்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயற்சித்தால் அவர்களை ஆஜராகக் கூறி, நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது ரத்து: சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Minister I. Periyasamy ,Chennai ,Madras High Court ,Minister ,I. Periyasamy ,Tamil Nadu Housing Board ,Ganesan ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...