×

ஜாமீனில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: கர்நாடக எல்லையில் பயங்கரம்

ஓசூர்: ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியில், நடுரோட்டில் வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஆனேக்கல் சூர்யா நகர் மரசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(27). இவர், கடந்த 2017ம் ஆண்டு, மனோஜ் பப்லு என்பவரை கொலை செய்த வழக்கில், கைதாகி சிறைக்கு சென்றார். 7 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரின் செல்போனுக்கு, ஒரு அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசிய விஜயகுமாரிடம், எதிர்முனையில் பேசியவர்கள் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, போனில் பேசியவாறே வீட்டிற்கு வெளியே சென்ற விஜயகுமாரை, மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் விஜயகுமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்திற்குள், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.இதில், படுகாயமடைந்த விஜயகுமார், நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார். அதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், சூர்யா நகர் போலீசார் விரைந்து சென்று, விஜயகுமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பெங்களூரு மாவட்ட ரூரல் எஸ்பி மல்லிகார்ஜூன் பாலதண்டி, நேரடி விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில், மனோஜ் பப்லு கொலைக்கு பழி வாங்கும் நோக்கில், விஜயகுமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், நடுரோட்டில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜாமீனில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: கர்நாடக எல்லையில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Hosur ,Anekal ,Vijayakumar ,Marasuru ,Anekal Surya Nagar, Karnataka ,Dinakaran ,
× RELATED பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்