×

தொழிலதிபர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

நெய்வேலி: நெய்வேலி அருகே மேடை அலங்கார நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சி என்ஜேவி நகரில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன்.

இவர் திருமண மண்டபங்களில் டெகரேஷன் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியை கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் அனுப்பிவிட்டு, தனது தந்தை வசிக்கும் சின்ன காப்பான்குளம் கிராமத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 60 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வெற்றிச்செல்வன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தொழிலதிபர் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். கொள்ளை போன 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.33 லட்சம் ஆகும்.

The post தொழிலதிபர் வீட்டில் 60 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...