×

வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கட்டிப்போட்டு 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

* சமூக வலைதளத்தில் பதிவேற்றியதால் பரபரப்பு

* 2 பேர் கைது, மேலும் 2பேருக்கு வலைவீச்சு

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே, 16 சிறுமியை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 சிறுவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும், வனப்பகுதிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், கே.மோரூர் வழியாக 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த 2 சிறுவர்களும், அந்த சிறுமியை மிரட்டி தங்களுடன் வருமாறு கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த சிறுமி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதையடுத்து அந்த சிறுமியை விரட்டிச் சென்று பிடித்த இருவரும், தாங்கள் ஓட்டி வந்த மினி டெம்போவில் ஏற்றி, வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர், சிறுமியை கைகளை கட்டிப் போட்டு, இரண்டு சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த சிறுமியின் கண்ணை கட்டி போட்டு விட்டு, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்து, தங்களது நண்பர்கள் இருவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், அவர்களையும் அப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இதை தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து, அந்த சிறுமியை மீண்டும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றார். பின்னர், நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊர் முக்கியஸ்தர்களிடம் கூறியுள்ளனர்.

பின்னர், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தலைமறைவாக இருந்த 2 சிறுவர்களையும் நேற்று பிடித்தனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அந்த சிறுவர்கள் ஏற்கனவே அந்த சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும், 18 வயது பூர்த்தி ஆகாத நிலையில், மினி டெம்போவை வணிக ரீதியாக ஓட்டி வருவாய் ஈட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களின் செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறுமியை பலாத்காரம் செய்த மற்ற இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கட்டிப்போட்டு 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kadaiyambatti ,
× RELATED ஆடுகள் விற்பனை ஜோர்