×

கிருமாம்பாக்கத்தில் மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது

பாகூர் : புதுவை கிருமாம்பாக்கம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை கிருமாம்பாக்கம் அருகே மகாத்மா காந்தி சார்காசிமேடு சாலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை நடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் சட்டை பையில் சோதனையிட்டனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ரத்தீஷ்கண்ணா (23), வன்னியர்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த ரேவந்த் (24), புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தனுஷ் (19), தரங்கம்பாடி தளச்சங்காடு பகுதி சேர்ந்த சுமன் ராஜா (19) என தெரியவந்தது. மேலும், இதில் ரத்தீஷ் கண்ணா, ரேவந்த் ஆகியோர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். தனுஷ், சுமன் ராஜா கிருமப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருபவர்கள்.

ரத்தீஷ் கண்ணா, ரேவந்த் ஆகியோர் புதுச்சேரி, கடலூரில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர்களிடம் இருந்து தனுஷ் கஞ்சா வாங்கி, கிருமாம்பாக்கத்தில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு விற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 360 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கிருமாம்பாக்கத்தில் மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Krumambakkam ,Bagur ,Krumambakkam, Pudu ,Mahatma Gandhi Sarkasimedu road ,Puduvai Krimambakkam ,Krimambakkam ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்