×

தமிழ்நாடு – கேரளா எல்லையில் நள்ளிரவில் விபத்து40 அடி பள்ளத்தில் உருண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி: டிரைவர் பரிதாப பலி, கிளீனர் உயிர் தப்பினார் வயதான தம்பதி டார்ச்லைட் அடித்ததால் சிறப்பு ரயில் தப்பியது

செங்கோட்டை: செங்கோட்டை அருகே தமிழ்நாடு -கேரள எல்லையில் நள்ளிரவில் 40 அடி பள்ளத்தில் உருண்டு தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத்தொடர்ந்து அவ்வழியாக கேரளா ெசன்ற சிறப்பு ரயிலை வயதான தம்பதியினர் டார்ச் லைட் அடித்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவில் இருந்து பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். கிளீனராக தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே குவளைக் கண்ணியை சேர்ந்த ேபாயாலி மகன் பெருமாள் (28) உடன் வந்தார். லாரி மலைப்பாதையில் நள்ளிரவு 12.30 மணியளவில் செங்கோட்டை அருகே தமிழ்நாடு – கேரள எல்லையில் கோட்டைவாசல் எஸ் வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் 40 அடி பள்ளத்தில் உருண்டு வந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்து அப்பளம்போல் நொறுங்கியது. இதில் லாரி டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்தில் பலியானார். லாரியில் இருந்து குதித்த கிளீனர் பெருமாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு நேற்று முன்தினம் சிறப்பு ரயில் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு சென்றது. பயணிகள் யாரும் இல்லை.

இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் செங்கோட்டை புளியரையை சேர்ந்த வயதான தம்பதியரான சண்முகையா (63), அவரது மனைவி வடக்கத்தியம்மாள் மற்றும் அருகில் உள்ள தோப்பு காவலாளி சுப்பிரமணியன் ஆகியோர், தண்டவாளத்தில் லாரி கிடப்பதை ரயில் பைலட்டிற்கு உணர்த்தும் வகையில் துரிதமாக செயல்பட்டு, டார்ச் லைட் மூலம் சிக்னல் காண்பித்தனர்.இதை பார்த்த பைலட், தண்டவாளத்தில் பாதிப்பு என உணர்ந்து உடனடியாக ரயிலை சற்று தொலைவில் நிறுத்தினார்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த புளியரை போலீசார், தீயணைப்பு படையினர், ரயில்வே போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் சிக்கிய லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மீட்பு பணிகள் காரணமாக கேரள சிறப்பு ரயில் 3 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு கேரளா புறப்பட்டு சென்றது.  மேலும் கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக சென்றது. விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்குபதிவு செய்து லாரி கிளீனர் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் இருப்பவர்களை காக்கவே டார்ச் லைட் அடித்தோம்
முதியவர் முத்தையா, அவரது மனைவி வடக்கத்தி அம்மாள் ஆகியோர் கூறுகையில், ‘நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த போது பெரிய சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது லாரி ஒன்று 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தண்டவாளத்தில் மேல் கிடந்தது. நள்ளிரவு தண்டவாளத்தில் செங்கோட்டையிலிருந்து கொல்லத்தை நோக்கி ரயில் ஒன்று வந்தது.

இதையடுத்து நாங்கள் கையில் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு தண்டவாளத்தில் 300 மீட்டர் தூரம் ஓடி ரயிலை நிறுத்தினோம். எங்களுக்கு வயதாகி விட்டது. நாங்கள் வாழ்ந்து முடித்து விட்டோம். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை. ரயிலில் இருப்பவர்கள் உயிரை பாதுகாப்பதற்காகவே ரயிலை டார்ச் லைட்டுடன் தடுத்து நிறுத்த முயற்சி செய்தோம்’ என்றனர். ரயில் நின்ற பிறகே உள்ளே யாரும் இல்லை என தெரியவந்தது. ரயிலை நிறுத்திய அவர்களின் செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post தமிழ்நாடு – கேரளா எல்லையில் நள்ளிரவில் விபத்து40 அடி பள்ளத்தில் உருண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி: டிரைவர் பரிதாப பலி, கிளீனர் உயிர் தப்பினார் வயதான தம்பதி டார்ச்லைட் அடித்ததால் சிறப்பு ரயில் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Tamilnadu-Kerala border ,Sengottai ,Tamil Nadu-Kerala border ,Kerala ,Tamil Nadu ,
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...