டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காய் பவுடர் என்ற பெயரில் ரூ.2,000 கோடி போதைப்பொருளை கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு கடத்தியுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய மூன்று தமிழர்கள் என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கு டெல்லியில் பசாய் தாராப்பூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹெல்த் மிக்ஸ் பவுடர், காய்ந்த தேங்காய் போன்ற உணவுப் பொருட்கள் என்ற பெயரில் விமானம் மற்றும் கடல் சரக்கு வழியாக போதை பொருட்களை இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என பல நாடுகளுக்கு கடத்தியுள்ளனர். இந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தியுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவான கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது appeared first on Dinakaran.