×

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

*பள்ளியில் போலீசார் ஆய்வு

பென்னாகரம் : பென்னாகரம் அருகே, சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டத்தில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, பல இடங்களில் தண்ணீர் பிரச்னை தலை தூக்கி உள்ளது. பென்னாகரம் ஏரியூர் பகுதியில், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தினந்தோறும் அரசு அலுவலகங்களில் புகார் தெரிவித்தும், போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரியூர் அடுத்த செல்லமுடி, முளையங்கரை கிராமங்களில், கடந்த 8 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை எனக்கூறிய பொதுமக்கள், இங்குள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 4 மாதங்களாக தண்ணீர் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர், நேற்று செல்லமுடி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குடிக்க தண்ணீர் இல்லாததையும், கழிப்பறைக்கு பயன்படுத்த தண்ணீர் இல்லாத தொட்டிகளை பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...