×

மாணவ, மாணவிகளுக்காக 1,381 அரசு பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆதார் அடையாள அட்டை பெறவும், ஏற்கனவே உள்ள ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ளவும் ஏதுவாக, 1,381 அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு செய்ய சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய அடையாள எண் ஆகும்.

இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. ஆதார் அடையாள அட்டை, இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கும் வழங்கப்பட்டு வரும் 12 இலக்கு அடையாள எண் தாங்கிய அட்டையாகும். உலகின் 2வது பெரிய மக்கள்தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம், நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் ஆகும். இந்தியாவில் இந்த திட்டம், கடந்த 2009 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 130 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாமை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவுகளை செய்து கொள்ளும் வகையில், பள்ளிகளில் முகாம் தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், அளே தர்மபுரி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று நடந்த ஆதார் பதிவு சிறப்பு முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளிகள்) மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம், மாநில அளவில் நேற்று பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1,381 அரசு பள்ளிகளில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற ஆதார் பதிவு சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

மாவட்டத்தில் 1,609 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமை பயன் படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மாணவ, மாணவிகளுக்காக 1,381 அரசு பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Dharmapuri ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...