×

புதிய குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சிக்கு ₹23 கோடி மதிப்பீட்டில், புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனை முன்னிட்டு, மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் விழா முன்னேற்பாடு பணிகளை, நேற்று ராஜேஸ்குமார் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மோகனூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ஆகியோர், மோகனூர் பேரூராட்சி பகுதிக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு முன்னிலையில், இன்று(24ம் தேதி) காலை 10.30 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக ₹23 கோடி மதிப்பீட்டில் மோகனூர் பேரூராட்சிக்கான தனி குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

The post புதிய குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Chief Minister ,M.K.Stalin ,Namakkal district ,Rajesh Kumar ,Moganur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு