×

26ம் தேதி முதல் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ வீடு வீடாக பிரசாரம் நடத்த வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள், 72 மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞரின் நினைவிடமும், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26ம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது. இதை விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம நடத்துவதால், அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.இ.டி திரைகளுடன் பிரமாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் திமுகவினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.

தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. பாஜ வீழ்த்தப்பட வேண்டிய கட்சி என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள திமுகவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறது.

* ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம், வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம்-என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரும் பயன்படும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் முதல்வரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26ம் தேதி‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதிப் பார்வையாளர்கள், பிஎல்ஏ-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கவும், 26ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ மற்றும் அதனோடு மறைமுக கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்தி, திமுக தலைவரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும்.

* மார்ச் 1ம் தேதி கட்சி தலைவர் 71ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான தலைவர், திமுகவை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். பெரியாரின் சமூகநீதியையும், அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கிய தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post 26ம் தேதி முதல் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ வீடு வீடாக பிரசாரம் நடத்த வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Voice of Stalin ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,Chennai ,DMK District Secretaries and Constituency Observers ,CM ,of ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...