×

முதல் காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிடுவேன்: இளம்பெண்ணுக்கு 2வது காதலன் மிரட்டல்; போலீசார் விசாரணை

சென்னை: முதல் காதலனுடன் திருமணம் செய்ய உள்ள இளம்பெண்ணுக்கு, தன்னுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த 2வது காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயது பெண், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியல் டியூஷன் செல்லும் போது, முகப்பேரை சேர்ந்த லோகேஷ் (28) என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டனர். இதற்கிடையே கடந்த ஆண்டு போயஸ் கார்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வடபழனியை சேர்ந்த ஆக்னல் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஆக்னல் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோர், முதல் காதலனான லோகேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆக்னல், அந்தப் பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை உன்னை திருமணம் செய்ய உள்ள முதல் காதலனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஆக்னலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதல் காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிடுவேன்: இளம்பெண்ணுக்கு 2வது காதலன் மிரட்டல்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Annanagar East ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…