×

திருவல்லிக்கேணியில் பரபரப்பு குளிர்பானத்தில் மது கலந்துகொடுத்து இளம்பெண் பலாத்காரம்: மெரினாவில் குதிரையோட்டும் வாலிபர் கைது

சோழிங்கநல்லூர்: திருவல்லிக்கேணியில் நள்ளிரவு நடைபாதையில் தங்கி இருந்த நாக்பூர் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த குதிரையோட்டும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனது தோழியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயில் மூலம் சென்னை வந்தார். பிறகு சேப்பாக்கம் ப்ளூ கேட் எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து வந்தார்.

இதற்கிடையே ப்ளூ கேட் அருகே மெரினாவில் குதிரையோட்டும் விழுப்புரம் மேல்பாப்பம்பாடி, கண்ணகி நகரை சேர்ந்த பாபுஜி (எ) சவுந்தர் (24) என்பவர், இளம் பெண் சென்னை வந்ததில் இருந்து அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். பிறகு உணவு உள்ளிட்டவை வாங்கி கொடுத்து தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் திடீரென மாயமானார்.  இதனால், அதிர்ச்சியடைந்த தோழி, இளம்பெண் மாயமானதை கண்டு கூச்சலிட்டு பொதுமக்களிடம் உதவி கேட்டார்.

சத்தம் கேட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடியதை அறிந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து சிறப்பு எஸ்ஐ ரவி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் மாயமானதும், அவருக்கு தமிழ் தெரியாது என்று கூறி அவரது தோழி அழுதுள்ளார். பின்னர், போலீசார் டார்ச்லைட் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கம் அருகே உள்ள புதரில் மாயமான இளம்பெண்ணை சவுந்தர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

உடனே போலீசார் இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அதிகளவில் மது குடித்து இருந்ததால் அவரால் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே சவுந்தரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, போதை தலைக்கு ஏறியதும், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் அதிரடியாக சவுந்தரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது தோழியை பாதுகாப்பு காரணமாக மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவல்லிக்கேணியில் பரபரப்பு குளிர்பானத்தில் மது கலந்துகொடுத்து இளம்பெண் பலாத்காரம்: மெரினாவில் குதிரையோட்டும் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni ,Chozhinganallur ,Tiruvallikeni ,Nagpur, Maharashtra ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊர் சென்ற...