சென்னை: திருப்பூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் (Phase-1) (2015-16) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 26 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அம்ருத் (2017-20) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 29 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள 15 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆக மொத்தம் 70 எண்ணிக்கைகள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்பட்டு ஏறத்தாழ 14,00,000 மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பூர் மாநகராட்சியில் புதிய (நான்காவது) குடிநீர் திட்டம் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் விரைவில் திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்பாட்டிற்கு வரப்பெறவுள்ளது.
இந்நிலையில், 70 எண்ணிக்கைகள் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு சீரான முறையில் நீரேற்றம் செய்து பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிநீரின் அளவை வழங்க ஏதுவாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் உள்ள நீரேற்றுக் குழாய்களிலும் (Inlet Pipe) மேற்பார்வை (SCADA) கட்டுப்பாட்டுடன் கூடிய தரவு அளவுமானி பொருத்திட மூலதன மானிய நிதி (CGF 2023-24) திட்டத்தின் கீழ் ரூ.11.33 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்க மாண்புமிகு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், இந்த மேற்பார்வை (SCADA) கட்டுப்பாட்டுடன் கூடிய தரவு அளவுமானி பொருத்தும் போது அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் எந்தவித மனித சக்தி இல்லாமல் அப்பகுதிகளுக்குத் தேவையான நிர்ணயிக்கப்பட்ட குடிநீரின் அளவை மேற்கண்ட 70 எண்ணிக்கைகள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சம கால இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யலாம். இது தவிர, பேரிடர் காலங்களில் மக்களின் அவசர கால தேவைக்கேற்ப குடிநீர் வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளனர்.
The post திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டம் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்பெறவுள்ளது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.