×

ஆற்காடு அருகே நள்ளிரவு அடுத்தடுத்து சோகம் பைக்குகள் மோதி தொழிலாளி பலி: தகவலறிந்து வந்த மனைவியும் விபத்தில் சாவு

ஆற்காடு: ஆற்காடு அருகே நள்ளிரவில் பைக் விபத்தில் கணவர் இறந்த தகவலை கேட்டு மகளுடன் பைக்கில் வந்த மனைவியும் விபத்தில் சிக்கி பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த எசையனூரை சேர்ந்தவர் பிரகாசம் (51). புதுப்பாடி அடுத்த பாப்பேரியில் உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுந்தரி. பணி காரணமாக இவர்கள் வேப்பூர் பெரியார் தெருவில் வசித்து வருகின்றனர்.

பிரகாசம் நேற்றிரவு 10.30 மணியளவில் இரும்பு கம்பெனியில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். புதுப்பாடி ஜி.எம். நகர் அருகே வந்தபோது எதிரே குக்குண்டி நோக்கி சென்ற புதுப்பாடி ஜி.எம்.நகர் ஒத்தவாடை ெதருவை சேர்ந்த ஆதி (18) என்பவரின் பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாசம் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஆதியை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாசத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பிரகாசத்தின் மனைவி சுந்தரி, தனது மகளுடன் பைக்கில் சொந்த ஊரான எசையனூருக்கு நேற்று சென்றிருந்தார். அவருக்கு கணவரின் இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மகள் வித்யாவுடன் பைக்கில் விரைந்தார். இரவு 11.40 மணியளவில் ஆற்காடு-கலவை சாலை தனியார் பாலிடெக்னிக் அருகேவந்தபோது, வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது.

இதில் சுந்தரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், சுந்தரியை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆற்காடு தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பைக் விபத்தில் கணவர் இறந்ததை கேட்டு வந்த அவரது மனைவியும் பைக் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

The post ஆற்காடு அருகே நள்ளிரவு அடுத்தடுத்து சோகம் பைக்குகள் மோதி தொழிலாளி பலி: தகவலறிந்து வந்த மனைவியும் விபத்தில் சாவு appeared first on Dinakaran.

Tags : Arcot ,Artgad ,Prakasam ,Esaiyanur ,Ranipet district ,Puduppadi ,Popperi ,Dinakaran ,
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...