×

பர்னிச்சர் கடை அதிபரின் உறவினரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 3 வடமாநில வாலிபர்கள் கைது

 

திருப்பூர், பிப்.23: திருப்பூர் பெரியார் காலனியில் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உறவினரை பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்கி பணம் பறித்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், பெரியார் காலனியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையை ஒட்டி மேல் மாடியில் செந்தில்குமாரின் உறவினர் குணசேகரம் (61) என்பவர் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர்கள் 3 பேர் இரும்புக்கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடையின் அருகே உள்ள மேல்மாடிக்கு பூட்டை உடைத்துச் சென்றுள்ளனர். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த குணசேகரன் யார் நீங்கள்? என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் அவருடைய கழுத்தை நெரித்து தாக்கி விட்டு, அவரிடம் இருந்த ரூ.1000ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். விசாரணையில் அவர்கள், பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்வேஸ் (24), ரகமதுல்லா (27), ஓசிக் (24) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த 3 பேரின் நண்பர்கள் ஏற்கனவே செந்தில்குமாரின் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்களை பார்ப்பதற்காக இவர்கள் 3 பேரும் அடிக்கடி கடைக்கு வந்துள்ளனர். அந்த பழக்கத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கில் 3 பேரும் ஆயுதங்களுடன் தொடர்ந்து 3 நாட்கள் சுற்றி வந்தது தெரியவந்தது.

The post பர்னிச்சர் கடை அதிபரின் உறவினரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 3 வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Tirupur ,Periyar Colony ,Senthilkumar ,Tirupur Mangalam Road Karumpalayam ,Dinakaran ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...