×

மெரினாவில் கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆயிரம்விளக்கு தொகுதி நா.எழிலன் (திமுக) மெரினாவில் கலைஞருக்கு அமைக்கப்பட்டு வரும் நினைவிடம் எப்போது திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது: நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞரின் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. கலைஞரின் நினைவிடம் மட்டுமல்ல. கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

அப்படிப் புதுப்பிக்கப்பட்டிரும் அண்ணா நினைவிடமும், கலைஞரின் புதிய நினைவிடமும் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன. எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்திருக்கிறோம். எனவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

The post மெரினாவில் கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marina ,Chief Minister ,M. K. Stalin ,Marina beach ,Minister of Public Works ,Marina of Ayalavilaku Constituency ,Na. ,Ezhilan ,DMK ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...