×

கரும்புக்கு கொள்முதல் விலையை ரூ.4,000 ஆக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000 ஆக அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கும் முறையை ஐந்தாண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிடுவதில் நிலத்திற்கான குத்தகைத் தொகை உள்ளிட்ட பல செலவுகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இது தான் முக்கியக் காரணம். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தான் நிலத்தின் குத்தகைத் தொகை உள்ளிட்ட செலவுகளையும் உற்பத்திச் செலவுடன் சேர்க்க வேண்டும்;

அதை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உழவர்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3,500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1,750 சேர்த்து டன்னுக்கு ரூ.5,250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5,000 ஆவது வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கரும்புக்கு கொள்முதல் விலையை ரூ.4,000 ஆக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Union Govt. ,CHENNAI ,BAMA ,Ramadas ,MS Swaminathan Committee ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...