×

ஊட்டி மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விவசாயி பலி: மனைவி உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம்: ஊட்டி மலைப்பாதையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி சம்பவ இடத்தில் பலியானார். லேசான காயத்துடன் அவரது மனைவி உயிர் தப்பினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45).விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இருவரும். தங்களுக்கு சொந்தமான சொகுசு காரில் நேற்று காலை கோவை வந்தனர். அங்கு பணிகளை முடித்து விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு சென்றனர்.

மாலையில் கல்லாறு 2வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்தில் பலியானார். மஞ்சுளா, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று கணேசனின் உடல் மற்றும் மஞ்சுளாவை கயிறு கட்டி மீட்டனர்.

பின்னர் மஞ்சுளாவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், அதே மருத்துவமனைக்கு கணேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊட்டி மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விவசாயி பலி: மனைவி உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Ooty hill ,Mettupalayam ,Ooty highway ,Ganesan ,Ooty Nanjanad ,Nilgiri district ,Manjula ,Ooty mountain pass ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...